விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை வாக்குப்பதிவு...
விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ம் தேதி உடல்நலக்குறைவால் இறந்ததால், நாளை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
தொகுதியில் 29 வேட்பாளர்கள் களத்தில் இருந்த போதிலும், தி.மு.க., பா.ம.க., மற்றும் நாம் தமிழர் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. தொகுதியில் உள்ள 2 லட்சத்து 34 ஆயிரத்தி 178 வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக 276 ஓட்டுச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 14ம் தேதி துவங்கிய தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6:00 மணிக்கு நிறைவு பெற்றது. அதனையாட்டி, தொகுதியில் கடந்த 25 நாட்களாக முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வந்த அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட வெளி மாவட்ட அரசியல் கட்சியினர் நேற்று மாலை 6:00 மணிக்கு பிறகு தொகுதியில் இருந்து வெளியேறினர்.
விழுப்புரம் மற்றும் அருகாமை மாவட்டங்களில் அரசு, பொது மற்றும் தனியார் துறைகளில் பணி புரியும் விக்கிரவாண்டி தொகுதியை சேர்ந்த வாக்காளர்களுக்கு, அவர்கள் ஓட்டு போட வசதியாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். அதேபோல் இத்தொகுதியை சேர்ந்த பிற மாவட்ட கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் விடுப்பு வழங்க வேண்டும்.
விக்கரவாண்டி தொகுதியை தவிர்த்த மாவட்டத்தில் பிற தொகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.