விக்ரம் பிரபு நடிக்கும் “சிறை” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் விக்ரம் பிரபு & L.K அக்ஷய் குமார் நடிப்பில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள “சிறை” படம், வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை இயக்கியுள்ளார்.
டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.
நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார்.
முன்னதாக ஒரு நீதிமன்ற பின்னணியில் கதாப்பாத்திரங்களின் உணர்வுகளை, அழுத்தமாக வெளிப்படுத்தும்படி வெளியான, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், படக்குழு தற்போது வெளியீட்டு தேதியை ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. இது ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் டீசர் இசை மற்றும் டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது