நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்த் பெயர் குறித்து ஆலோசனை - விஷால்!
நடிகர் சங்கத்திற்கு மறைந்த நடிகர் விஜயகாந்த் பெயர் வைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.
தமிழர் திருநாளான தை மாதம் முதல் நாளில் தமிழ்நாடு முழுவதும் பொங்கல் திருநாளாக கோலாகலமாக கொண்டாடி வருகின்றன. தமிழர் கலாசாரத்தில் சிறந்த வரவேற்பை பெற்ற பொங்கல் திருநாள் இன்று நாடு முழுவதும் புது பானையில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகிறது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்து தனது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர்: "பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். நான் வீட்டில் பொங்கல் கொண்டாடுவது வழக்கம். இந்த வருடம் புதிதாக பொதுமக்களுடன் பொங்கல் கொண்டாடியுள்ளேன். பொதுமக்கள் அனைவரும் மகனாக என்னை பார்த்தார்கள்.
இந்த பகுதியில் குடிநீர் வரவில்லை என்று தெரிவித்தார்கள். நான் என்னுடைய உதவியை செய்து வருகிறேன். இதனை அரசியல் ஆக்க நான் விரும்பவில்லை. மேலும், பொதுமக்கள் மனசார வாழ்த்துவது ஒரு பாக்கியம். அதனை நான் இன்று பெற்றுள்ளேன்.
நடிகர் சங்க கட்டடம் இந்த வருடத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும் என்று நோக்கம் உள்ளது. நடிகர் சங்கத்திற்கு இந்த வாரத்தில் அடிகள் நாட்ட உள்ளோம். நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்த் பெயரை வைப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு நடிகர் விஷால் தெரிவித்தார்.