விஜயகாந்த் இறுதி ஊர்வலம் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் இன்று பிற்பகல் 1:00 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. இதன் பின் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடலுக்கு திரைப் பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, விஜயகாந்த் உடல் இன்று பொதுமக்களின் பார்வைக்காக சென்னை தீவுத் திடலில் வைக்கப்படுவதாக தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டது. இன்று அதிகாலை 4 மணி அளவில் தேமுதிக அலுவலகத்திலிருந்து தீவுத் திடலுக்கு சாலை மார்க்கமாக காலை 6 மணியளவில் கொண்டு வரப்பட்டது. இன்று பிற்பகல் 1 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு இன்று மாலை 4:45 மணிக்கு அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
விஜயகாந்த் உடல் கொண்டு வரப்படும் பாதை:
- தீவு திடல்
- பல்லவன் சாலை
- சென்ட்ரல் முனையம்
- தினத்தந்தி சிக்னல்
- கீழ்பாக்கம்
- பச்சையப்பன் கல்லூரி
- அமைந்தகரை
- அரும்பாக்கம்
- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கோயம்பேடு தேமுதிக அலுவலகம்
முன்னதாக தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடலுக்கு அரசு மரியாதை வழங்குவதற்கான ஒத்திகையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். தீவுத் திடலில் இருந்து கோயம்பேடு கொண்டு வரப்படும் விஜயகாந்த்தின் உடல் தேமுதிக அலுவலகத்தின் பின்புறம் வழியாக உடல் அடக்கம் செய்யும் இடத்திற்கு வர உள்ளது.
இது தொடர்பாக தேமுதிகவினருடன் கோயம்பேடு காவல் துணை ஆணையர் உமையாள் ஆலோசனை நடத்தினார். மேலும் இறுதி மரியாதைக்கான ஏற்பாடுகள் குறித்தும் கலந்து பேசினார். உடல் அடக்கம் செய்யப்படும் போது கட்சியினர் மற்றும் குடும்பத்தினர் தனி தனியாக அமர இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. உடல் அடக்கம் நடைபெறும் இடத்தில் சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறையினருடன் ஆலோசனை நடத்தினார்.
இதேபோல விஜயகாந்த் உடல் அடக்கம் நடைபெறும் இடத்திலும், கோயம்பேடு 100 அடி சாலையிலும் சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் நேரில் ஆய்வு செய்தார்.