"திமுகவை அகற்ற விஜய் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும்" - முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி !
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "திமுக கூட்டணிக்கு பயத்தை முருக பக்தர்கள் மாநாடு உருவாக்கியிருக்கிறது. இதனால் அவர்கள் மாநாடு குறித்து மாற்று கருத்து தான் கூறுவார்கள். முருக பக்தர்கள் மாநாடு ஆன்மீகத்தின் அடையாளமாக ஒரு எழுச்சி மாநாடாக தான் அமைந்திருந்தது.
முருக பக்தர்கள் மாநாட்டில் மக்கள் குவிந்ததன் காரணமாக மக்கள் மத்தியில் ஒரு மாற்றம் வந்திருக்கிறது. ஆளுகின்ற திமுக அரசிற்கு ஏமாற்றம் கிடைத்துள்ளது. அதிமுகவில் பாஜக இருப்பதால்தான் தங்களால் அதிமுக கூட்டணிக்கு செல்ல முடியாது என திருமாவளவன் கூறியது குறித்த கேள்விக்கு, திருமாவளவன் கருத்துக்கள் அவர் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து வரக்கூடிய கருத்துக்கள். திமுக கட்சியோடு மனதளவில் உறவை முடித்துக் கொண்டார். பேரளவில் உறவு வைத்துள்ளார். திருமாவளவன் அதிமுக கூட்டணி வருவது குறித்து எடப்பாடி பழனிச்சாமி முடிவு எடுப்பார்.
அதிமுக ஏற்படுத்தியுள்ள கூட்டணி வலுவான கூட்டணி. இதில் மாற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் சிறிதளவும் கிடையாது. திமுக கூட்டணியில் உள்ள விசிக, மதிமுக, தவேகா கம்யூனிஸ்ட் கட்சிகள் காங்கிரஸ் உட்பட திமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிக சீட்டுகள் வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றார்கள் என்று சொன்னால் அங்கே பூகம்பம் வெடித்துள்ளது என்று தான் அர்த்தம். திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணி முறியக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.
முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாவை விமர்சனம் செய்யும் வகையில் வீடியோவை ஒளிபரப்பியது வருத்தமளிக்கிறது. மறைந்த முன்னாள் தலைவர்களை விமர்சிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டதை
தவிர்த்திருக்கலாம். அறிஞர் அண்ணாவின் பேச்சு, செயல், எழுத்துக்கள் சிலரின் மனதை புண்படுத்தி இருக்கலாம், அதனுடைய வெளிப்பாடாக வீடியோ வெளியிட்டு இருக்கலாம்.
ஒரு நிகழ்ச்சியில் நடக்கின்ற நல்ல நிகழ்வுகளைப் பற்றி பேசுவோம் அதில் நடந்த ஒரு நிகழ்வைப் பற்றி பேசி அதனுடைய ஒட்டுமொத்த மாநாட்டின் நல்ல கருத்துக்களை புறக்கணிக்க இன்றைய அரசியல் சூழலில் மறைந்த தலைவர்களின் நல்ல நிகழ்வுகளை பற்றி பேசுவதுதான் சாலச் சிறந்தது. முன்னாள் தலைவர்களின் ஒரு போக்கு சிந்தனைகளையும் அந்த நேரத்தில் எடுத்த முடிவுகளைப் பற்றி தற்போது விமர்சனம் செய்வது தேவையற்ற விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. திருமாவளவன் அதிமுக கூட்டணிக்கு வந்தால் அதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுப்பார்.
திமுக ஆட்சியை எதிர்க்கும் கட்சிகள் அதிமுக தலைமையில் இணையும் காலம் விரைவில் வரும். எடப்பாடி பழனிச்சாமியை தொட்டுப் பார்க்கவோ, அவரது வாழ்வியல் முறையிலோ, கருத்தியல் முறையிலோ தாக்குதல் நடத்தினால் அதிமுகவின் எதிர் தாக்குதல் கடுமையாக இருக்கும். எங்கள் வாயில் இருந்து வரக்கூடிய வார்த்தைகள் வெடிகுண்டாக வரும்.
திமுக ஐடி விங் தனது மூர்க்கத்தனமான செயல்பாடுகளை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி அசிங்கப்படுத்த நினைத்தவர்கள் இன்று ஓரமாக ஒதுங்கிஇருக்கிறார்கள், திமுக அப்படி நினைத்தால் அவர்களும் ஓரமாக ஒதுங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்படும்
திமுகவின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற எண்ணுகின்ற தலைவர்களில் ஒருவராக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இருக்கிறார். விஜய் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும். அதிமுக தலைமை தான் திமுகவிற்கு வலுவான எதிர்ப்பை கொடுக்கும் தலைமை திமுகவை வெல்ல வேண்டும் என்றால் அதிமுகவால் மட்டுமே முடியும் என்பதால் விஜய் பக்க பலமாக, எடப்பாடியாடி பழனிச்சாமியோடு கைகோர்ப்பதுத தான் சாலச் சிறந்த முடிவு என தெரிவித்துள்ளார்.