”பிரச்சார கூட்டத்திற்கு திட்டமிட்டு தாமதமாக வந்த விஜய்.?” - FIR-ல் பரபரப்பு தகவல்
கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் உட்பட 40 பேர் பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்து பல பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இந்த FIR-ல் பரபரப்பு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவை, கரூரில் தனது அரசியல் பலத்தை பறைசாற்ற விஜய் திட்டமிட்டு காலதாமதமாக வந்தார். மரங்களிலும்,கடை கொட்டகைகளிலும் தொண்டர்கள் ஏறி அமர்ந்தனர். பல இடங்களில் நிபந்தனைகள் மீறப்பட்டன. தவெக நிர்வாகிகள் இதை கண்டு கொள்ளவில்லை. மெயின்ரோடு வழியாக வந்து காலதாமதமாக வந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தி நிபந்தனையை மீறினர். மரக்கிளை முறிந்ததால் கீழே நின்றவர்கள் மீது விழுந்தனர். ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோரிடம் பலமுறை எச்சரித்தும் கேட்கவில்லை; நீண்ட நேரம் காத்திருந்தனர். தண்ணீர், மருத்துவ வசதி இல்லை. கூட்ட நெரிசலால் ஏற்பட்ட அழுத்தத்தால் மக்கள் உடல் நிலை சோர்வு ஏற்பட்டது. கீழே விழுந்தவர்கள் மிதிபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பரபரப்பு தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளன.