தவெக-வில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு - பொறுப்பாளர்களை நியமித்த விஜய்!
தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி முகவர்களின் கருத்தரங்கு அண்மையில் கோவையில் இரண்டு நாள்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற 2 நாளும் அக்கட்சியின் தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்தினர். இதில் ஏராளமான கட்சி தொண்டர்கள் வழிநெடுக அவரை சூழ்ந்து வரவேற்றனர்.
இந்த வரவேற்பின்போது கட்சித் தொண்டர்களில் சிலர் அபாயகரமான முறையில் விஜய் சென்ற பிரச்சார வாகனத்தை பின் தொடர்ந்து சென்றது, மரத்தின் மீது ஏறி அந்த வாகனத்தில் குதித்தது, உள்ளிட்ட ஒழுக்கமற்ற நடவடிக்கைகள் சமூக வலைத்தளங்களில் தவெக-வுக்கு எதிரான விமர்சனங்களுக்கு வழி வகுத்தது.
தொடர்ந்து விஜய், “நம்ம அரசியல்ல கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோட கண்டிப்பும் self discipline-ம் 100% சமரசமற்றதாத்தான் இருக்கணும் ஃப்ரெண்ட்ஸ்” என தனது தொண்டர்களுக்கு கோரிக்கை வைத்திருந்தார். அத்துடன் அடுத்தடுத்து தவெக-வின் நிகழ்வுகளுக்கு இதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.
— TVK Vijay (@TVKVijayHQ) April 30, 2025
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய், தனது கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை குழுவை அமைத்துள்ளார். அதன்படி தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழு மற்றும் மண்டல ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்களை தொடங்கி அதை நிர்வகிக்க பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளார்.