துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரின் புதுச்சேரி வருகை - பாதுகாப்பு ஏற்பட்டால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் சுற்றுலா பயணிகள்
துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் மூன்று நாள் அரசு முறை பயணமாக இன்று புதுச்சேரி வருகின்றார். தொடர்ந்து, நாளை 16ம் தேதி திங்கட்கிழமை ஜிப்மரிலும், 17ம் தேதி புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, உயர் கல்வி பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
முன்னதாக சென்னை விமானத்தில் இருந்து இன்று மதியம் 12:30 மணிக்கு புறப்பட்டு, 1:10 மணிக்கு புதுச்சேரி விமான நிலையம் வரும் துணை குடியரசுத் தலைவருக்கு. அம்மாநில துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அவருக்கு வரவேற்பு அளிக்கின்றனர். பின் அங்கிருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக, கடற்கரை சாலை பழைய நீதி மன்ற வளாகத்தில் உள்ள உயர்நீதிமன்ற
நீதிபதிகள் விருந்தினர் மாளிகைக்கு சென்று தங்கவுள்ளார்.
இதனிடையே துணை குடியரசுத் தலைவர்வருகையையொட்டி, புதுச்சேரி முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மூன்று நாட்களுக்கு கடற்கரை சாலை, டூமாஸ் சாலை, செயின்ட் லூயிஸ் தெரு உள்ளிட்ட முக்கிய சாலைகள் மற்றும் துணை ஜனாதிபதி செல்லும் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி கடற்கரை சாலையும் மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி வருகின்றனர்.