வேங்கைவயல் விவகாரம் - காவல்துறை நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி!
திருமங்கலத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் வேங்கைவயல் விவாகரத்தில் காவல்துறை நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளித்திருந்தார். அதில், “கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஆனால் விசாரனையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து தீவிர நடவடிக்கை எடுக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி காவல்துறையிடம் விண்ணப்பித்திருந்தேன். அனுமதி மறுத்து காவல்துறை தரப்பில் உத்தரவிடப்பட்டது. எனவே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி நிர்மல் குமார் அமர்வில் முன்பு நடைபெற்றது. அப்போது, தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முகமது ஜின்னா ஆஜராகி, “வேங்கைவயல் சம்பவத்துக்கு காரணம் இரு தனிநபர்களுக்கு இடையேயான பிரச்சினையே எனவும் இந்த விவகாரம் தொடர்பான அனைத்து விபரங்களும் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து உண்மை தன்மை உறுதி செய்யப்பட்ட பின்னரே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.” என்றும் வாதிட்டார். இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் நீதிபதி நிர்மல் குமார் இன்று(ஏப்ரல்.01) தீரிப்பு வழக்கினார் . அப்போது அவர், வேங்கைவயல் விவகாரத்தில் மனுதாரர் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது சரியே. காவல்துறையின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.