வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 226-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, சாமிநாதன், மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "அந்நிய ஆதிக்கத்துக்கு அடிபணிந்து வரிகட்ட மறுத்து, அஞ்சாநெஞ்சனாகப் போர் நடத்திய விடுதலை நாயகர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களது நினைவு நாள்!
சிப்பாய்ப் புரட்சிக்குப் பல ஆண்டுகள் முன்னரே விடுதலைப் போராட்ட உணர்வைப் பரவச் செய்து, உறுதி குலையாமல் போராடி உயிர் துறந்த பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரராம் கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான உணர்வுக்குச் சான்றாக என்றும் போற்றப்படும்"! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.