முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி... விவசாயிகள் மகிழ்ச்சி!
தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி. இது சென்னை மக்களின் குடிநீர் ஆதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இந்த ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளான காட்டுமன்னார்கோவில், பாப்பாக்குடி, ஸ்ரீமுஷ்ணம், ஜெயங்கொண்டம், அரியலூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. அதனால் ஏரிக்கு செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை மற்றும் பல்வேறு காட்டாறுகள் மூலம் அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து 47.50 அடி முழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது. வீராணம் ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 586 ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறுகிறது. கீழணையில் இருந்து வடவாறு வழியாக ஏரிக்கு விநாடிக்கு 950 கன அடி தண்ணீரும், பல்வேறு ஓடைகள் மற்றும் காட்டாறுகள் மூலம் விநாடிக்கு 450 கன அடி தண்ணீரும் வந்து கொண்டு இருக்கிறது.
ஏரியின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறையினர் சேத்தியாத்தோப்பு விஎன்எஸ்எஸ் வடிகால் மதகு வழியாக விநாடிக்கு 80 கன அடி தண்ணீரும், சென்னைக்கு 74 கன அடி தண்ணீரும் திறந்து விட்டுள்ளனர். மேலும் தொடர் மழையின் காரணமாக சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் யாரும் ஏரிக்குள் இறங்க வேண்டாம் என பொதுப்பணி துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.