இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இணைந்த வருண் சக்கரவர்த்தி!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய டி20 தொடர் ஞாயிற்றுக்கிழமை (பிப்.2) நிறைவடைந்தது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது.
இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராஹுல் , ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் விளையாடுவதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி இடம்பெற்றுள்ளார். மேலும், அவர் நாக்பூரில் இந்திய அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியிலும் அவர் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . வருண் சக்கரவர்த்தி இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் 14 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடர் நாயகன் விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.