For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“வடசென்னை 2 வரும்... கண்டிப்பா வரும்..!” - நடிகர் தனுஷ் பேச்சு

07:11 AM Jan 04, 2024 IST | Jeni
“வடசென்னை 2 வரும்    கண்டிப்பா வரும்   ”   நடிகர் தனுஷ் பேச்சு
Advertisement

வடசென்னை 2 நிச்சயம் வரும் என்றும், அதெற்கென்று ஒரு நேரம் வரும் என்றும் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

Advertisement

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ்,  ஜான் கொக்கன் சுமேஷ் மூர், சிவ்ராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  தனுஷின் பிறந்தநாளன்று திரைப்படத்தின் டீசர் வெளியானது. படத்தின் டீசர் மற்றும்  பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.

இத்திரைப்படம் ஜனவரி 12 அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் முன்-வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் மறைந்த நடிகர்கள் விஜயகாந்த் மற்றும் புனித் ராஜ்குமார் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த விழாவிற்கு தனுஷ், பிரியங்கா மோகன், சிவ்ராஜ்குமார், சந்தீப் கிஷான், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் தனுஷ் பேசியதாவது :

சிறுதுளி பெருவெள்ளம் என்று சொல்வார்கள். நான் 2002-ல் சிறுக சிறுக சேர்த்த துளி, இன்று பெருவெள்ளமாக வந்துள்ளது. இது நான்‌ சேர்த்த சொத்து. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். கில்லர் கில்லர் கேப்டன் மில்லர். இப்படத்தை பற்றி யோசித்தால் என் மனதிற்கு முதலில் வருவது உழைப்பு. எல்லோரும் வேர்வை, ரத்தம் சிந்தி நிஜமாக உயிரை பணயம் வைத்து எடுத்த படம் இது.‌

அருண் மாதேஸ்வரன் உண்மையில் டெவில். மிகவும் மிருகத்தனமாக உழைப்புக்கு சொந்தக்காரர். அவரது இந்த டீமின் உழைப்பில் 50 சதவீதம் கூட நான் பண்ணவில்லை. என்னை பூ போல பார்த்துக்கொண்டனர். நான் நிறைய புதுமுக இயக்குநர்களுடன் படம் பண்ணியுள்ளேன். அருண் மாதேஸ்வரனை பார்த்தபோது எனக்கு வெற்றிமாறன் ஞாபகம் வந்தது. தன்னம்பிக்கை, திறமை, அரகன்ஸ் என எல்லாம் இவரிடமும் உள்ளது.

கொரோனா நேரத்தில் இந்த கதையை என்னிடம் சொன்னார். 15 நிமிடங்கள் இப்படத்தின் லைன் சொன்னார். எனக்கு தெரிந்தது இது சம்பவம் பண்ற கை அப்படினு. நல்லவேளையாக நான் முதலில் பண்ணிட்டேன். நேரம் நல்லா இருந்தா நீங்கள் மிகப் பெரிய இடத்துக்கு செல்வீர்கள்.

ஜி.வி. எப்போது கேட்டாலும் உடனே ஓடிவருவார். சிவராஜ்குமார் சார், நீங்கள் பல மேடைகளில் எனது ரசிகன் என்று சொல்லியுள்ளீர்கள். அதற்கு நான் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. நீங்கள் சிரிக்கும்போது உங்கள் முகத்தில் உங்கள் அப்பா, தம்பி தெரிகிறார்கள். மூன்று பேரும் சிரிப்பது போலதான் உள்ளது. அப்பா பெயரை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று உங்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.

கலை இயக்குநர் ராமலிங்கம் மற்றும் சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் இருவருக்கும் நன்றி. முழு படமும் பார்த்த பிறகு ‘ஹப்பா’ என்றிருந்தது. முழு உழைப்பை கொடுத்துள்ளீர்கள். கேப்டன் மில்லர் படத்துக்கு அருண் மாதேஸ்வரன் வைத்துள்ள டேக் லைன் ‘மரியாதை தான் சுதந்திரம்’. இப்போ எதுக்கு இங்க மரியாதை இருக்கு, யாருக்கு சுதந்திரம் இருக்கு. எது செய்தாலும் ஒரு கூட்டம் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறது. சின்ன கூட்டம் தான் ஆனால் இருக்கிறது. அது உனக்கு இது எனக்கு என்பது எதற்கு. அவன் (இறைவன்) முடிவு செய்யட்டும். அப்போது பாத்துக்கலாம். எது எதற்கோ ஓடுகிறோம். ஆட்டம் எல்லாம் ஆடுகிறோம். நமது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் அந்த ஆட்டம் நின்றுவிடும்.

இந்த படம் ரொம்ப புதுசாக இருக்கும் என்று நம்புகிறேன். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். வடசென்னை 2 வரும். கண்டிப்பா வரும். அதுக்கு என்று ஒரு நேரம் இருக்கு. இத்தனை உள்ளங்கள் வேண்டும் வேண்டும் என்று சொல்லும்போது வராமலா போய்விடும். அது வரும்போது அது பத்தி பேசலாம். மாரி செல்வராஜ் மீது மரியாதை கூடிக்கொண்டே போகிறது. நம்ம படத்தை பற்றி நிறைய பேச வேண்டும். அதை பிறகு பேசலாம். எண்ணம் போல் வாழ்க்கை. எண்ணம் போல்தான் வாழ்க்கை” என்று பேசினார்.

இதையடுத்து நடிகர் தனுஷிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. ‘நண்பர்கள்’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு,  “ஜி.வி.பிரகாஷ் குமார் போல் இருக்க வேண்டும்.‌ நண்பர்கள் என்றால் கஷ்டத்திலும் நஷ்டத்திலும் கூட இருக்க வேண்டும் தானே. அப்போ ஜி.வி. போல இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

‘சமூக வலைத்தளம்’ என்று கேட்டதற்கு, “ஒரு மிகப் பெரிய காலத் திருடன். உங்களுக்கே தெரியாமல் உங்களின் நேரத்தை திருடிக்கொண்டு இருப்பது உங்களுக்கே தெரியாது” என்று பதிலளித்தார். ‘மெண்டல் ஹெல்த்’ என்றதற்கு “ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும். அன்பால் மட்டுமே அதை சரி செய்ய வேண்டும்” என்று தனுஷ் பதிலளித்தார்.

இறுதியாக ‘வெற்றி’ என்று கேட்கப்பட்டது. “இங்குள்ள எல்லோருமே எனது வெற்றிதான். இதுபோல நாங்கள் சந்தித்து 333 நாட்கள் ஆச்சு” என்று நடிகர் தனுஷ் கூறினார். தொடர்ந்து ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப,  ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு’ என்ற நடிகர் விஜயகாந்த் பட பாடலை பாடினார்.

Tags :
Advertisement