உத்தரகண்ட் வெள்ளபாதிப்பு - 1200 கோடி நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி!
இந்தியாவின் வட மாநிலங்களில் இந்த ஆண்டு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பஞ்சாப், உத்தரகண்ட், காஷ்மீர் போன்ற மாநிலங்கள் கடுமையாக பாதித்துள்ளன.
குறிப்பாக உத்தரகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பு மற்றும் வெள்ளத்தால் உத்தர்காஷியில் உள்ள தரலி-ஹர்சில், சாமோலியில் தரலி, ருத்ரபிரயாக்கில் உள்ள செனகாட், பவுரியில் சைன்ஜி, பாகேஷ்வரில் கப்கோட் மற்றும் நைனிடால் மாவட்டத்தின் சில பகுதிகள் உட்பட பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த பேரிடர்கள் தொடர்பாக மாநில அரசு மத்திய அரசிடமிருந்து ரூ.5,702 கோடி நிவாரணம் கோரியது.
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று உத்தரகண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து, உத்தரகாண்ட் மாநிலத்தில் பேரிடர் பாதித்த பகுதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி ரூ.1,200 கோடி நிவாரணத் தொகுப்பை அறிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.