’உத்தரகாண்ட் திடீர்வெள்ளப் பேரிடர்” - பிரதமர் மோடி இரங்கல்!
உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் அமைந்துள்ள ஹர்சில்-தாராலி பகுதியில், கீர் கங்கை (Kheer Ganga) ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளது.இதனால், கீர் கங்கை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, அருகிலுள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளப்பெருக்கில் சுமார் 20 முதல் 25-க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என உள்ளூர்வாசிகள் அஞ்சுகின்றனர். மேலும், 10 முதல் 12 பேர் வரை வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்த நிகழ்வு குறித்து தகவல் அறிந்தவுடன், மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.மாநிலப் பேரிடர் மீட்புப் படை (SDRF), தேசியப் பேரிடர் மீட்புப் படை (NDRF), இந்திய ராணுவம் மற்றும் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை (ITBP) ஆகிய பல குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் பிரதமர் மோடி இந்த பேரிடருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ”உத்தரகாண்டில் தாராலியில் ஏற்பட்ட இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதனுடன், பாதிக்கப்பட்ட அனைவரின் நல்வாழ்விற்கும் நான் பிரார்த்திக்கிறேன். முதலமைச்சர் புஷ்கர் தாமி ஜியிடம் பேசி நிலைமை குறித்த தகவல்களைப் பெற்றுள்ளேன். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், நிவாரணம் மற்றும் மீட்புக் குழுக்கள் சாத்தியமான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.