For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Uttarakhand | “தைரியமா இருங்க..” - நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்!

01:30 PM Sep 15, 2024 IST | Web Editor
 uttarakhand   “தைரியமா இருங்க  ”   நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆறுதல்
Advertisement

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட 30 தமிழர்களில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

Advertisement

கடந்த செப். 1-ம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த 30 பேர் (17 பெண்கள் உட்பட) உத்தரகாண்ட் ஆதி கைலாஷ்க்கு சென்னையில் இருந்து ரயில் மூலம் சென்றனர். அவர்கள் அங்கிருந்து வேன் மூலம் ஆன்மிக தலங்களுக்கு சென்று சுற்றி பார்த்து வந்தனர். உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் அந்த 30 பேரும் ஆதிகைலாஷ்க்கு வேனில் புறப்பட்டனர். அப்போது பித்தோரகர் மாவட்டம் அருகில் சென்ற போது, ஆதி கைலாஷ் பகுதியில் இருந்து 18 கி.மீ. தொலைவில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால் ஆதி கைலாஷ் பகுதிக்கு செல்ல முடியாமலும், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமலும் 30 பேரும் தவித்தனர். மேலும் இதுபற்றி செல்போன் மூலம் கடலூர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அம்மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், உத்தரகாண்ட் பித்தோரகர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு 30 பேரையும் மீட்டு பாதுகாப்பாக தங்க வைக்குமாறு கேட்டுக் கொண்டார். அதன்பேரில் அவர்கள் மீட்பு குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து அங்குள்ள ஆசிரமத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களில் 10 பேர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மற்றவர்களையும் மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார். இதற்கிடையே நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட தமிழர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர்கள் பாதுகாப்பாக உள்ளதை கேட்டு தெரிந்து கொண்டார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மீட்கப்பட்ட மக்கள் நன்றி தெரிவித்தனர்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். அங்கு பாதுகாப்பாக உள்ள தமிழர்களில் ஒருவரான பராசக்தி அவர்களைத் தொடர்புகொண்டு பேசினேன். பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலமுடன் தங்களது ஊருக்குத் திரும்ப அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்!” இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement