உத்தரபிரதேசம் : கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து!
உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ராவில் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த குவாரியின் உள்ளே பெரிய பள்ளம் தோண்டப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. இந்த குவாரியில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், வழக்கம்போல் இன்று காலை தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென பாறைகள் சரிந்து விழுந்துள்ளது.
இந்த விபத்தில் 16 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை தொழிலாளி ஒருவரின் உடல் மட்டும் சடலமாக மீட்கப்பட்டு உள்ளது. மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கல்குவாரி சட்டவிரோதமாக இயங்கி வந்ததா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.