For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அமெ. அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ்  - துளசேந்திரபுரம் மக்கள் மகிழ்ச்சி!

09:39 AM Jul 23, 2024 IST | Web Editor
அமெ  அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ்    துளசேந்திரபுரம் மக்கள் மகிழ்ச்சி
Advertisement

அமெரிக்காவின் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement

நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் கடந்த 19-ம் தேதி குடியரசு கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்று குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.

ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் களம் இறங்கினார். பைடன் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டதுடன் டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் பேசுவதற்கு மிகவும் தடுமாறினார். மேலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் என்றும், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசை டிரம்ப் என்றும் தவறுதலாக கூறினார்.

இவை ஜனநாயக கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி அவர் அவ்வப்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார் என்றும் அவர் போட்டியிட வேண்டாம் என்றும் ஜனநாயக கட்சியினர் தெரிவித்தனர்.  தொடர்ந்து அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் தெரிவித்தார். இதனை அடுத்து ஜனநாயக கட்சியின் சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்விகமாக கொண்டவர். ஆங்கிலேய அரசாங்கத்தில் இவரது தாத்தா பி.வி. கோபாலன் ஸ்டெனோகிராபராக இருந்தார். அதன் தொடர்ச்சியாக சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியாற்றினார். ஷாம்பியா நாட்டுக்கு அகதிகளை கணக்கெடுக்க ஆங்கிலேய அரசாங்கம் பி.வி. கோபாலனை அனுப்பி வைத்தது.  அப்போது ஷாம்பியா நாட்டுக்கு குடும்பத்தோடு சென்று, பின்னர் அமெரிக்காவில் பி.வி கோபாலன் குடியேறினார்.

இவரது இரண்டாவது மகளான சியாமளாவுக்கும், ஜமைக்கா நாட்டை சேர்ந்தவருக்கும்
பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ்.   இவர் (கமலா ஹாரிஸ்) வழக்கறிஞராக பணியாற்றினார்.  அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கலிபோர்னியாவின் முதல் பெண் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.  அரசியலில் வளர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில், துணை அதிபராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கமலா ஹாரிஸ் குடும்பம் இன்றளவும் தமிழ்நாட்டோடு நெருக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவரது சித்தி சென்னையில் வசித்து வருகிறார். அவரது உறவினர்கள் சிலர் துளசேந்திரபுரம் கிராமத்தில் இன்றும் வசிக்கின்றனர். மேலும் அவரது குலதெய்வ கோயிலான தர்ம சாஸ்தா கோயில் துளசேந்திரபுரத்தில் உள்ளது. அந்த கோயிலுக்கு கமலா ஹரிஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நன்கொடை அளித்துள்ளார் என்ற விபரம் கோயில் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது
குறித்து துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அவர்
வெற்றி பெற்று துளசேந்திரபுரம் கிராமத்திற்கு வருகை தந்து மக்களை சந்திக்க
வேண்டும் எனவும் இந்தியாவிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.  மேலும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி அவரின் குலதெய்வ கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி கிராம மக்கள் வழிபட்டனர்.

Tags :
Advertisement