ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் - பாகிஸ்தான் கடும் கண்டனம்!
ஈரானின் அணு ஆயுத தளங்கள், ஏவுகணை மையங்கள் மீது கடந்த 13ம் தேதி ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் சரமாரியான வான்வழி தாக்குதல் நடத்தியது. ஈரானும் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகள் இடையே போர் நடந்து வருகிறது.
இதற்கிடையே, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் இறங்கியுள்ளது. ஈரானின் 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இதற்கு ஈரான் அணுசக்தி கழகம் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என்று ஈரான் விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியதற்கு அனைத்து சர்வதேச சட்டங்களுக்கும் எதிரானது. தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள ஈரானுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது" என தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என நேற்று பாகிஸ்தான் பரிந்துரை செய்திருந்த நிலையில், தற்போது அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..