For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க வேண்டும்" - #UnionMinister தர்மேந்திர பிரதானின் X தள பதிவிற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதில்!

09:58 PM Sep 10, 2024 IST | Web Editor
 தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க வேண்டும்     unionminister தர்மேந்திர பிரதானின் x தள பதிவிற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதில்
Advertisement

நிலுவையில் உள்ள தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Advertisement

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (சமக்ர சிக்சா அபியான்) கீழ், தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த, மத்திய கல்வி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யாத மாநிலங்களுக்கு இந்த நிதி விடுவிக்கப்படவில்லை. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கான நிதியை மறுப்பது, அதே வேளையில் குறிக்கோள்களில் வெற்றியடையாதோருக்குத் தாராளமாக நிதி ஒதுக்குவது, இப்படித்தான் மத்திய பாஜக அரசு தரமான கல்வியையும் சமத்துவத்தையும் ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளதா, முடிவை நாட்டுக்கும், நாட்டு மக்களின் புரிதலுக்குமே விட்டுவிடுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலளித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"ஜனநாயகத்தில் மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி இருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் ஒரு விஷயத்தை உருவாக்கும் நோக்கில் ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்துக்கு எதிராக இருப்பது அரசியல் சாசன உணர்வுக்கும் ஓர் ஒருங்கிணைந்த இந்தியாவுக்கும் எதிரானது. பல்வேறுகட்ட ஆலோசனைகளுக்குப் பின்னரே தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டது. அதில் இந்திய மக்களின் ஒட்டுமொத்த அறிவும் அடங்கியுள்ளது. தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான உங்களின் திட்டமிட்ட எதிர்ப்பில் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன்.

தமிழ் உள்ளிட்ட தாய்மொழியில் கல்வி பயிற்றுவிப்பதை நீங்கள் எதிர்க்கிறீர்களா, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தேர்வுகள் நடத்துவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடத் திட்டத்தையும், பாடப் புத்தகங்களையும் உருவாக்குவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா, ஒட்டுமொத்த வளர்ச்சியையும், பல்துறை அறிவையும், எதிர்கால தேவையை நிறைவேற்றக் கூடியதாகவும் அமைந்துள்ள புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறீர்களா?அப்படி இல்லாவிட்டால், உங்களின் அரசியல் லாபத்தை தள்ளிவைத்துவிட்டு தமிழ்நாடு மாணவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துகிறேன்" இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

இதையும் படியுங்கள் :காதலிக்க நேரமில்லை படத்தின் BTS வீடியோ – #JayamRaviBirthDay முன்னிட்டு வெளியீடு!

இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் எக்ஸ் தளப் பதிவை குறிப்பிட்டு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது :

"நிலுவையில் உள்ள தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள பல்வேறு கூறுகளை தமிழ்நாடு ஏற்கனவே நடைமுறைப்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசின் எதிர்ப்புகள் எல்லாம் மும்மொழி கொள்கை மற்றும் ‘NEP’ பாடத்திட்டத்தின் மாற்றங்கள் போன்ற குறிப்பிட்ட கூறுகளுடன் தொடர்புடையவையே. ‘சமக்ரா சிக்ஷா அபியான்’ நிதி வழங்குவதை ‘NEP’ உடன் இணைப்பது கல்வியில் மாநில அரசு கொண்டுள்ள சுயாட்சியை மீறுவதாகும். எனவே ‘SSA’ திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள தமிழ்நாட்டுக்கான நிதியை ‘NEP’ போன்ற எந்த நிபந்தனைகள் இல்லாமல் விடுவிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்”

  • இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.

Tags :
Advertisement