For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இங்கிலாந்து தேர்தல்: தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் வெற்றி!

04:03 PM Jul 05, 2024 IST | Web Editor
இங்கிலாந்து தேர்தல்  தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் வெற்றி
Advertisement

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில், தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன் 19,145 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

Advertisement

பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக் கடந்த 2022-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவி காலம் 2025 ஜனவரியில் நிறைவடைகிறது. இதனால் நேற்று பிரிட்டனில் ஒரேகட்டமாக அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியும், தொழிலாளர் கட்சியும் நேருக்கு நேர் மோதின. நேற்று (ஜூலை 4) காலை தொடங்கிய தேர்தல் இரவு 7 மணிக்கு சுமூகமாக முடிந்தது. இந்தியா போல் இல்லாமல் பிரிட்டனில் வாக்குச்சீட்டு முறையே நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் இன்று (ஜூலை 5) காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியை சந்திக்கும் என தெரிவித்திருந்தது. கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறும் எனவும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 650 தொகுதிகளில் 410 தொகுதிகளில் வெற்றிப் பெற்று தனிப்பெரும்பான்மையோடு தொழிலாளர் கட்சி ஆட்சியமைக்கும் எனவும் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்தன.

கன்சர்வேட்டிவ் கட்சி 131 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் எனவும் அம்முடிவுகள் தெரிவித்தன. இந்நிலையில் இன்று (ஜூலை 5) காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதன்படி ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி வெறும் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

ஆட்சி அமைக்க 326 இடங்கள் தேவை. கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி 380க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு தொழிலாளர் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

இந்நிலையில், தொழிலாளர் கட்சி சார்பில், ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவ் தொகுதியில் போட்டியிட்ட, தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் 19,145 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட, தமிழ் வம்சாவளியை சேர்ந்த முதல் எம்.பி., என்ற பெருமையை உமா குமரன் பெற்றுள்ளார். இவரது பெற்றோர் இலங்கையின் ஆயுதப் போரில் இருந்து தப்பி இங்கிலாந்தின் கிழக்கு லண்டனில் தஞ்சமடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய லண்டன் மேயர் சாதிக் கானுக்காகவும், மிக சமீபத்தில் உலகளாவிய காலநிலை அமைப்பின் ராஜதந்திர உறவுகளின் இயக்குநராகவும் உமா குமரன் பணியாற்றியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை, விஞ்ஞானிகள் மற்றும் காலநிலை தலைவர்களுடன் இணைந்து உலகெங்கிலும் உள்ள துணிச்சலான காலநிலை நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.

Tags :
Advertisement