ராகிங் தொடர்பான செயல்திட்டங்களை சமர்ப்பிக்க வேண்டும் - கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு!
ராகிங் தடுப்பு தொடர்பாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து உயர் கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில்,
"நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ராகிங்கை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கெனவே வகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. அதில், சட்ட வழிகாட்டு குழுவின் ஆதரவைப் பெறுதல், கல்வி நிறுவனங்களின் பொறுப்புணர்வு, திடீர் ஆய்வுகள் குறித்த பல்வேறு நெறிமுறைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றை முழுமையாக பின்பற்றி கல்லூரிகள், விடுதிகளில் ராகிங் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும்.
இதற்காக நியமிக்கப்பட்ட பேராசிரியர் குழுவினர் கல்லூரி வளாகங்களில் கண்காணிப்புப் பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு, மாணவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். அதேவேளையில், முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல் போன்ற ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். மாணவர்கள் மத்தியில் ராகிங் எதிர்வினைகள் குறித்து போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துதற்கான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் உயர் கல்வி நிறுவனங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியமாகும்.
ஒட்டுமொத்தமாக ராகிங் தொடர்பாக எந்தவொரு மாணவரும் பாதிக்கப்படாத வகையில், அது தொடர்பான குழுக்களையும் கட்டுப்பாடுகளையும் மேலும் வலுப்படுத்த வேண்டும். மேலும், ராகிங் தொடர்பாக மாணவர்களிடம் பெறப்படும் புகார்கள், அது குறித்து ஆய்வு செய்வது, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து யுஜிசி தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.