17 ஆண்டுகால கோப்பை கனவுடன் மோதும் இரு அணிகள்... வெல்லப்போவது பஞ்சாபா, பெங்களூரா?
2025 ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. நாளை இத்தொடரின் இறுதிப்போட்டி குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாத பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
இதனால் போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் அறிமுகமானது முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இதுவரை நான்கு முறை (நடப்பு ஐபிஎல் தொடரையும் சேர்த்து) இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. கடந்த 2009, 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியபோதிலும், அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.
இந்நிலையில் கோப்பையை வெல்லும் கனவோடு நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது பெங்களூரு அணி. அதுபோல கடைசியாக கடந்த 2014ஆம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பஞ்சாப் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்.
கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு அந்த அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர், இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியை கேப்டனாக மிகவும் அற்புதமாக வழிநடத்தி வருகிறார்.
இரு அணிகளும் முதல்முறை கோப்பையை வெல்லும் கனவோடு நாளை மோத உள்ள நிலையில், ரசிகர்கள் சோகம் கலந்த மகிழ்ச்சியோடு உள்ளனர். காரணம் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் என இருவருமே தங்கள் அணிகளுக்காக கடுமையாக உழைத்துள்ளனர். இருவருமே கோப்பையை வெல்ல தகுதியானவர்களே. இதனால் யார் போட்டியில் வென்றாலும், யார் தோற்றாலும் கொஞ்சம் வறுத்தமே.
இரண்டு அணிகளும் கோப்பையின் கனவோடு நாளை களம் இறங்குவார்கள் என்பதால் போட்டியில் விருவிருப்புக்கு பஞ்சம் இருக்காது. முதல்முறை எந்த அணி கோப்பையை வெல்லும் என்பதை நாளை பொறுத்திருந்து பார்க்கலாம்.