ஆரணி அருகே வாகன விபத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு!
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அமுதா(35) மஞ்சுளா(32) இருவரும் அக்கா தங்கை. இதில் அமுதா திருமணமாகி கணவர் இறந்த நிலையில் தங்கையுடன் வசித்து வந்துள்ளார்.
இதனிடையே மஞ்சுளாவிற்கு போளூர் அருகே உள்ள மணிகண்டன் (35) என்பவர் உடன் திருமணமான நிலையில் மணிகண்டன், மஞ்சுளா இருவரும் வண்ணாங்குளம் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு மணிகண்டன், மனைவி மஞ்சுளா மற்றும் அமுதா ஆகிய மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் ஆரணி சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்று வீடு திரும்பி உள்ளனர். அப்போது, இரவு 10 மணி அளவில் ஆரணி வேலூர் நெடுஞ்சாலையில் கொங்கராம்பட்டு அரசு பள்ளி அருகே சென்றபோது வேலூரில் இருந்து கொய்யாப்பழங்களை ஏற்றி வந்த லோடு வேன் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் மணிகண்டன் மற்றும் அமுதா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மஞ்சுளா ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரணி வேலூர் நெடுஞ்சாலையில் வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.