கேரளாவில் மேலும் இருவருக்கு அமீபா மூளைக்காய்ச்சல்!
கேரள மாநிலத்தில் மூளையைத் தின்னும் அமீபா மூளைக்காய்ச்சல் என்ற அரிய வகை தொற்று பரவி வருகிறது. கோழிக்கோடு, திருவனந்தபுரம், வயநாடு, மலப்புரம், கொல்லம் பகுதிகளில் இந்த நோய் பாதிப்பு உள்ளது. மாசுபட்ட நீரில் வாழும் இந்த அமீபா,குளிப்பது அல்லது அதில் முகத்தை கழுவுவதன் மூலம் மூக்கின் வழியாக மனித மூளைக்குள் நுழைந்து அங்குள்ள திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்தி உயிரிழப்பிற்கு வழிவகுக்கிறது. கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் இந்த அமீபிக் காய்ச்சலால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்நோயால் பாதிக்கப்பட்ட 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து உயிரிழப்புகளால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று மலப்புரத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி மற்றும் கோழிக்கோடு, ராமநாட்டுக்கரையைச் சேர்ந்த ஒருவர் என இருவருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து கோழிக்கோட்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.