மதுரவாயல் பைபாஸ் சாலையில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - கர்ப்பிணி உட்பட இருவர் உயிரிழப்பு!
சென்னை அடுத்த மேடவாக்கம் மகாராஜபுரம் 1 வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 58) இவரது மனைவி இந்துராணி (வயது 51). இவரது மகள் மூன்று மாத கர்ப்பிணி தீபிகா (வயது 21). இவர்கள் மூன்று பேரும் கால் டாக்ஸியில் போரூரில் இருந்து தாம்பரம் மதுரவாயில் பைபாஸ் சாலை வழியாக மேடவாக்கத்திற்கு வந்துள்ளனர்.
அப்போது ஓட்டுநர் புவனேஷ் காரை இயக்கியுள்ளார். இதனிடையே அனகாபுத்தூர் சீனிவாசா நகர் அருகே பைபாஸ் சாலையில் சென்ற போது மது போதையில் எதிர் திசையில் வந்த மணிகண்டனின் கார் புவனேஷ் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வாகனங்களை மீட்டு விபத்தில் படுகாயம் அடைந்த பத்மநாபன் குரோம்பேட்டை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அனுப்பி வைத்தனர். அவரது மகள் தீபிகா வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தந்தை மற்றும் மகள் இருவரும் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து இருவரின் உடலும் உடற்கூராய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்தில் காயமடைந்த பத்மநாபன் மனைவி மற்றும் கார் ஓட்டுநர் இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்த முதற்கட்ட விசாரணையில் போக்குவரத்து விதிகளை மீறி மணிகண்டன் குடிபோதையில் வாகனம் ஊட்டி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.