கடலூரில் நண்பர்களை கொன்று புதைத்த இருவர் கைது - நடந்தது என்ன?
கடலூர் அருகே உள்ள டி.புதூர் பகுதியை சேர்ந்த அப்பு ராஜ் மற்றும் எம்.புதூர் பகுதியை சேர்ந்த சரண்ராஜ் இருவரும் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி முதல் காணவில்லை. இதனால் அவர்களது உறவினர்கள் அளித்த புகாரின் பெயரில் திருப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த இவர்களுடைய நண்பரான பால்ராஜ் என்பவர் மீது போலீசார் சந்தேகம் அடைந்தனர். அதனடிப்படையில் விசாரணை செய்ததில் அப்புராஜ் மற்றும் சரண்ராஜ் இருவரையும் பால்ராஜ் கொலை செய்து நெய்வேலி அருகே உள்ள மணல் குவாரியில் புதைத்தது தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய எம். புதூரை சேர்ந்த தருண்குமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக பால்ராஜ் மற்றும் தருண்குமாரை போலீசார் கொலை நடந்த நெய்வேலி பகுதியில் உள்ள மணல் குவாரிக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது அந்த நேரத்தில் பால்ராஜ் மற்றும் தருண்குமார் இருவரும் போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றனர். அப்பொழுது மணல் குவாரியில் உள்ள பள்ளத்தில் விழுந்து இருவரின் கால்களும் உடைந்தது. இதனை தொடர்ந்து இருவரையும் சிகிச்சைக்காக போலீசார் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இந்த கொலை வழக்கை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தன்னுடைய நண்பர்களை கொலை செய்து புதைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.