ரயில் இன்ஜின் சோதனை ஓட்டத்தின்போது விபத்து - தண்டவாளத்தில் நடந்து சென்ற வடமாநில இளைஞர்கள் 2 பேர் உயிரிழப்பு!
மதுரை ராமேஸ்வரம் இடையே ரயில் இன்ஜின் சோதனை ஓட்டத்தின் போது இன்ஜின் மோதி வடமாநில தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து இருப்புப்பாதை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புளியங்குளம் மேம்பாலம் கீழ், ரயில்வே தண்டவாளத்தில் மதுரை-ராமேஸ்வரம் இடையே ரயில் இன்ஜினின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது ரயில்வே தண்டவாளத்தில் இருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அதனைப் பார்த்து இன்ஜின் ஓட்டுநர் ஒலி எழுப்பியுள்ளார். ஆனால் நொடிப்பொழுதில் இருவர் மீதும் இன்ஜின் மோதி தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இன்ஜின் பைலட் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிலைமான் காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், விபத்தில் உயிரிழந்த இருவரும் புளியங்குளம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வந்த உத்திரபிரதேச மாநிலம் கோராக்பூர் பகுதியை சேர்ந்த வடமாநில தொழிலாளர்களான மதுசூதன் ப்ராஜபதி (30) மற்றும் க்யானந்த பிரதாப் கௌத் (22) என்பது தெரியவந்துள்ளது.