ரஷியாவில் பாலம் இடிந்து விழுந்ததால் தடம்புரண்ட ரயில் - 7 பேர் உயிரிழப்பு!
ரஷியாவின் பேல்கோரோட் பிராந்தியம் கிளிமோவ் நகரில் இருந்து பயணிகள் ரயில் தலைநகர் மாஸ்கோ நோக்கிச் சென்றது. அந்த ரயில் பிரையன்ஸ்க் என்ற இடத்துக்கு அருகே சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த மேம்பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதனால் பாலத்தின் இடிந்த கான்கிரீட் சுவர்கள் தண்டவாளத்தின் மீது பரவி கிடந்துள்ளது.
இதையறியாமல் சென்ற ரயில் இடிபாடுகள் மீது மோதி தடம் புரண்டுள்ளது. இது குறித்த தகவலின்பேரில் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியை முடுக்கிவிட்டனர். எனினும் இந்த சம்பவத்தில் ரயில் ஓட்டுநர் உள்பட 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் 30-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அதேபோல் உக்ரைன் எல்லையில் உள்ள குர்ஸ்க் பிராந்தியம் அருகே ஒரு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்த போது அங்குள்ள பாலமும் திடீரென இடிந்து சரக்கு ரயில் மீது விழுந்தது. இதில் அந்த ரயிலின் சில பெட்டிகள் தடம்புரண்டு தண்டவாளத்தை விட்டு விலகிச் சென்றது. இந்த விபத்தில் ரயில் டிரைவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அங்கு விரைந்த மீட்பு படையினர் தடம்புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தியுள்ளனர். இந்த இரண்டு விபத்துகள் குறித்து குற்றவியல் புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.