’திருப்பூர் இளம்பெண் தற்கொலை’ - கணவர் உட்பட மூவர் கைது!
திருப்பூர் கே.செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த குப்புசாமி - சுகந்தி ஆகியோரின் மகள் பிரீத்தி (வயது 26). கடந்த 11 மாதங்களுக்கு முன்பு இவருக்கும, ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த சதீஸ்வர் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது பிரீத்திக்கு 120 பவுன் நகை, சொகுசு கார், ரூ.25 லட்சம் வரதட்சணையாக பெற்றோர் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரீத்தியின் பெற்றோருக்கு சொந்தமான சொத்தை சமீபத்தில் விற்பனை செய்ததில் ரூ.50 லட்சம் வந்துள்ளது. அந்த பணத்தை தனக்கு கொடுக்குமாறு பிரீத்தியிடம் தொடர்ந்து கேட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பிரீத்தி, கடந்த சில நாட்களாக பெற்றோர் வீட்டில் இருந்து வந்த நிலையில் நேற்று முன் தினம் பிரீத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலை மீட்ட நல்லூர் போலீசார் உடற்கூறாய்வு சோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து பிரீத்தியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பிரீத்தியின் கணவர் சதீஸ்வர், மாமனார் விஜயகுமார், மாமியார் உமா ஆகியோரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து உடலை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நல்லூர் போலீசார் இன்று பிரீத்தியின் கணவர் சதீஸ்வர், மாமனார், மாமியார் ஆகிய மூன்று பேரையும் வரதட்சணை கொடுமை வழக்கில் கைது செய்தனர். இதனை தொடர்ந்து பிரீத்தியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர்.