திருப்பூர் பேருந்து விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வு!
திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு நோக்கி நேற்று காலை 8.30 மணியளவில் தனியார் பேருந்து புறப்பட்டது. இந்த பேருந்தில் 60க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், ஈரோடு தனியார் கல்லூரியில் பயின்று வந்த பெரியசாமி, ஹரிகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்தார்.
இந்த நிலையில், விபத்தில் படுகாயமடைந்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குருராஜ் (18) என்ற மாணவர் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார். இதன்மூலம், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் குருராஜ் மூளைச்சாவு அடைந்ததை தொடர்ந்து அவரது இதயம், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், கண் உள்ளிட்ட உறுப்புகளை தானம் அளிக்க உறவினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.