மசினகுடியில் மனிதர்களை போல் ஊருக்குள் நடமாடிய புலி!
முதுமலை மசினகுடியில் உள்ள புலிகள் காப்பகத்தில், இரவு நேரத்தில் சாலையில் கம்பீரமாக நடந்து சென்ற புலியை அவ்வளியாக சென்ற சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
முதுமலை வனவிலங்கு காப்பகம் ஆனது தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் வடமேற்கில் கர்நாடகா மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. 1940-இல் தொடங்கப்பட்ட இதுவே தென்னிந்தியாவின் முதல் வனக்காப்பகம். முதுமலை புலிகள் காப்பகம் அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ளது. இந்த வனப் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சியளிக்கிறது.
எப்போதும் பசுமையாக இருக்கும் வெப்ப மண்டல காட்டில் அந்தக் காப்பகம் அமைந்துள்ளதால் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டுப்பன்றி போன்ற காட்டு விலங்குகளும் அவ்வப்போது சாலைகளில் உலா வருவதும், சாலையை கடந்து செல்வதும் அதிகரித்துள்ளது. அதேபோல் முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள மசினகுடி பகுதியில் இரவு நேரம் புலி ஒன்று சாலையில் கம்பீரமாக உலா வந்து சாலையை கடந்து சென்றது.
அப்போது அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் புலியை கண்டு ரசித்ததோடு மட்டுமல்லாமல் வீடியோ பதிவு செய்தும் வெளியிட்டுள்ளனர்.