ஆந்திர வனப்பகுதியில் யானை தாக்கி மூன்று பக்தர்கள் பலி!
ஆந்திரப் பிரதேசம் அன்னமய்யா மாவட்டத்தில் ஒபுலவரிப்பள்ளி கிராமத்திலுள்ள வனப்பகுதி வழியாக தலக்கோணா கோயிலுக்கு 30 பேர் அடங்கிய பக்தர்கள் குழுவொன்று, இன்று அதிகாலை 2.30 மணியளவில் யாத்திரை சென்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த யானைக் கூட்டம் ஒன்று பக்தர்களை விரட்டி தாக்கியுள்ளது.
இதில் 3 பக்தர்கள் சம்பவயிடத்திலே உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தகவலறிந்து விரைந்து சென்ற காவல் துறையினர் உடல்களை மீட்டு இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையினர் கூற்றுபடி , கிட்டத்தட்ட 15 யானைகள் கொண்ட கூட்டம் 30 பக்தர்கள் கொண்ட குழுவை தாக்கியுள்ளது. இறந்தவர்கள் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என தெரிவித்தனர். மேலும் , உயிர் பிழைத்த மற்ற பக்தர்களை அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.