“உதகை மாநாட்டில் துணை வேந்தர்கள் பங்கேற்க கூடாது என மிரட்டல்” - தமிழ்நாடு அரசு மீது ஆளுநர் ஆர்.என். ரவி குற்றச்சாட்டு!
பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மாநாடு ஊட்டியில் இன்றும்(ஏப்.25) நாளையும்(ஏப்.26) நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பல்வேறு பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் பங்கேற்றனர்.
ஆனால், இந்த விழாவில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் பெரும்பாலும் பங்கேற்கவில்லை. குறிப்பாக மதுரை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்கள் பங்கேற்றவில்லை. மொத்தமாக 49 பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் 34 துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் இயக்குனர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதனிடையே தமிழ்நாடு ஆளுநர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஆகியோரை கண்டித்து திமுக, விசிக, இடது சாரி கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் உதகையில் உள்ள ஆளுநர் மாளிகைளில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இந்த சூழலில் மாநாட்டின்போது தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, “தமிழ்நாட்டில் உள்ள துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள கூடாது என சிறப்பு குழுவை வைத்து மிரட்டி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சிறந்த தொலைநோக்கு பார்வையாளரான துணை குடியரசு தலைவர் ஜகதீப் தங்கர் இன்று நம்மளுடன் இருப்பது அதிர்ஷ்டம். இது 4வது மாநாடு. 2021 ஆம் ஆண்டில், தங்கப் பதக்கம் வென்றவர்கள் உட்பட மாணவர்களைச் சந்தித்தபோது, அவர்களின் விருப்பங்கள் மிகவும் குறைவாக இருப்பதைக் கண்டேன். அது ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை அல்ல மாநிலத்தில் இரண்டு இணையான கல்வி நீரோட்டங்கள் இருப்பதை நாங்கள் அறிந்தோம். ஒன்று மேலே செல்கிறது, மற்றொன்று சரிந்து வருகிறது.
தனியார் பள்ளிகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. அரசுப் பள்ளிகள் அப்படி இல்லை. அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தைப் படிக்கத் தெரியாது. அரசு பல்கலைக்கழகங்களின் நிலை மோசமாக உள்ளதாலே, அவர்களின் தரம் உயர்த்துவதற்காக இந்த மாநாடு நடத்தப்பட்டது. ஆனால் தமிழ்நாடு அரசு துணைவேந்தர்கள் யாரும் கலந்து கொள்ள கூடாது என மிரட்டியதால், இந்த மாநாட்டில் அரசு துணைவேந்தர்கள் கலந்து கொள்ளவில்லை. துணைவேந்தர்கள் யாரும் கலந்து கொள்ள கூடாது, மாநாட்டிற்கு துணைவேந்தர்கள் செல்லக்கூடாது என காவல்துறையினர் துணைவேந்தர்கள் வீட்டிற்கு சென்று மிரட்டியதால், இந்த மாநாட்டில் அரசு துணைவேந்தர்கள் கலந்து கொள்ளவில்லை”
இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.