எம்புரான் திரைப்பட கலைஞர்கள் மிரட்டப்படுவது மோடி அரசின் பாசிச எண்ணத்தை காட்டுகிறது - சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி பேட்டி!
மதுரை தமுக்கம் மைதானத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. ஏப்ரல் 2 முதல் 6 வரை நடைபெற்ற மாநாட்டின் நிறைவு நாளான நேற்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தேர்வு நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக கேரள மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டார். இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்-க்கு பிறகு கேரளாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 2வது பொதுச்செயலாளராகவும், சிபிஐ(எம்)-ன் 6வது பொதுச் செயலாளராகவும் எம்.ஏ.பேபி உள்ளார்.
மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு, மத்தியக் குழு கூடி கூட்டம் நடத்தி பொதுச் செயலாளரை தேர்வு செய்தனர். கடந்த ஆண்டு சீதாராம் யெச்சூரி உயிரிழந்ததைத் தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர் பதவி காலியாக இருந்தது. பிரகாஷ் காரத் இடைக்கால ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்றார். இந்நிலையில் எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்று மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ராமமூர்த்தி சிலைக்கு அக்கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.பேபி மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்வில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், தமிழ் மாநிலச் செயலாளர் சண்முகம், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் எம்.ஏ.பேபி செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது..
” மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி கொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மற்றும் மதுரை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
மோடி அரசை எதிர்த்து போராடுவதற்காக அகில இந்திய மாநாடு வாயிலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அகில இந்திய மாநாட்டில் தமிழ்நாட்டைச் சார்ந்த திரைக்கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர். அதே வேளையில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் எம்புரான் தயாரிப்பாளருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது.
எம்புரான் திரைப்படம் அரசியல் சார்ந்த படமல்ல, இப்படத்தில் 2002 ஆம் ஆண்டில் குஜராத் கலவரம் குறித்து காட்சிகள் இடம் பெற்றுள்ளது. எம்புரான் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் மோடி அரசால் மிரட்டப்பட்டு வருகிறார்கள், இது மோடி அரசின் பாசிச எண்ணத்தை வெளிப்படுத்துகிறது, இதை எதிர்த்து போராட கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது
தமிழ்நாட்டை பொறுத்தளவில் திமுக தலைமையில் மதசார்பற்ற கூட்டணி அமைத்து போராடி வருகிறோம், இக்கூட்டணி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடித்துள்ளது. தமிழ்நாட்டில் கூட்டணி அமைத்தது போல இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் மோடி அரசுக்கு எதிராக கூட்டணி அமைத்து போராட வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவில் 20 சதவீதம் பெண் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மே 20 ஆம் தேதி தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும்” என எம்.ஏ.பேபி தெரிவித்தார்