அச்சுறுத்தும் கொரோனா... ராமநாதபுரத்தில் இருவருக்கு தொற்று உறுதி!
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்துச் சென்றது. ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பரவல் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே, சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. கொரோனா தொற்று தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் இதுவரை 7,154 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோன பாதிப்புகள் பதிவாகியுள்ளன. நேற்றைய நிலவரப்படி செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 2,223 ஆக உள்ளது. தொடர்ந்து குஜராத், மேற்கு வங்கம், மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் உள்ளன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 2 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு பேருக்கு கொரோனோ தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, வெள்ளரி ஓடை பகுதியைச் சேர்ந்த சுமார் 74 வயது முதியவர் மற்றும் பட்டணம் காத்தானைச் சேர்ந்த 56 வயது பெண் ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.