தேமுதிக அலுவலகத்தில் ஆயிரக்கணக்கில் திரண்ட தொண்டர்கள்: வடபழனி-கோயம்பேடு சாலை ஒருவழிப் பாதையாக மாற்றம்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆயிரக்கணக்கானோர் தொண்டர்கள் திரண்டதால் வடபழனி-கோயம்பேடு சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமையகம் இன்று காலை அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் திரைப்பட துறையில் கொடி கட்டி பறந்த நிலையில் அதன் பிறகு அரசியலில் காலூன்றி, அதிலும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் வரை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2006ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்போட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை வரை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நாளை மாலை 4.30 மணிக்கு விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சாலிகிராமத்தில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் , கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. விஜயகாந்த்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் குவிந்து வருவதால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, போக்குவரத்தை நெரிசலை சரிசெய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வடபழனி - கோயம்பேடு பாதை ஒருவழிச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது.