For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“என்னை தாக்கியவர்களும் நன்றாக படிக்க வேண்டும்” - முதலமைச்சரை சந்தித்தபின் மாணவர் சின்னத்துரை பேட்டி!

12:19 PM May 07, 2024 IST | Web Editor
“என்னை தாக்கியவர்களும் நன்றாக படிக்க வேண்டும்”   முதலமைச்சரை சந்தித்தபின் மாணவர் சின்னத்துரை பேட்டி
Advertisement

என்னை தாக்கிய மாணவர்களும் நன்றாக படித்து, அனைவரிடமும் ஒற்றுமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என முதலமைச்சரை சந்தித்த பின், மாணவர் சின்னத்துரை பேட்டியளித்துள்ளார்.

Advertisement

நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகாபதி. முனியாண்டி கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சின்னத்துரை என்ற 17 வயது மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வந்தனர்.

இவர்களது வீட்டில் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி இரவு 10.30 மணியளவில் 3 பேர் அத்துமீறி நுழைந்து சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இருவரும் படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தனர்.

விசாரணையில் சின்னத்துரையுடன் படித்த சக மாணவர்கள் சாதிய வன்மத்தால் இந்த தாக்குதலை நடத்தியது அம்பலமானது. இந்த கொடூர நிகழ்வு தமிழ்நாட்டில் கடும் அதிர்வலையை கிளப்பியது.

இதனிடையே கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னத்துரை நீண்டநாள் சிகிச்சை பெற்ற நிலையில் 12-ம் வகுப்பு காலாண்டு தேர்வை மருத்துவமனையிலேயே எழுதினார். பொதுத் தேர்வை ஆசிரியர் ஒருவரின் உதவியோடு எழுதிய மாணவர் சின்னத்துரை 600 மதிப்பெண்ணுக்கு 469 மதிப்பெண்கள் பெற்று தேர்வாகி அசத்தினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  மாணவர் சின்னத்துரையை தொடர்புகொண்டு தனது வாழ்த்துகளை நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று (மே 7) சின்னதுரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சின்னத்துரை கூறியதாவது,

“முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு என் நன்றியை தெரிவித்தேன். உயர் கல்வி செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். நான் மீண்டு வர பள்ளிகல்வித்துறை அமைச்சரே காரணம். நான் பி.காம் முடித்து சி.ஏ படிக்க விரும்புகிறேன். இந்த சம்பவம் நடக்காமால் இருந்தால் கூடுதல் மதிப்பெண் பெற்றிருப்பேன். என்னை தாக்கிய மாணவர்களும் நன்றாக படித்து, அனைவரிடமும் ஒற்றுமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

Tags :
Advertisement