’சூர்யா 45’ படத்தின் டைட்டில் இதுதான்... வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரெட்ரோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் 45- வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 45’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில், த்ரிஷா, சுவாசிகா, இந்திரன்ஸ், காளி வெங்கட், நட்டி சுப்பிரமணியம், ஷிவதா உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தினை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். படத்தை இயக்குவதுடன் ஆர். ஜே. பாலாஜி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. 20 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு சூர்யா- த்ரிஷா இணைந்து நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகி உள்ளது. இப்படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
அதன்படி, இப்படத்தின் டைட்டில் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு 'கருப்பு' என பெயரிடப்பட்டுள்ளது. கோயிலுக்கு அருகில் நடிகர் சூர்யா அரிவாளுடன் நிற்பது போன்ற புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. தெலுங்கு பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா தனது 46வது படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.