"இளையராஜா, வைரமுத்து பிரிவுக்கு காரணம் இதுதான்" - கங்கை அமரன் சொன்ன ரகசியம்!
ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில் அனுராதா அன்பரசு தயாரிப்பில், வீர அன்பரசு இயக்கி, நடித்துள்ள படம் 'கமாண்டோவின் லவ் ஸ்டோரி'. இந்த படத்தில் பப்லு பிரித்திவிராஜ், புதுப்பட்டு சக்திவேல், வாழை ஜானகி, கதாநாயகி ஏஞ்சல், ஸ்ரீதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் கங்கை அமரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, "பொதுவாக கமல் இயல்பாக இருக்க மாட்டார். ரஜினிகாந்த் மிகவும் இயல்பாக இருப்பார். அனைவரும் இயல்பாக தான் இருக்க வேண்டும். அதுதான் நல்லது. கமலைப் பற்றி இன்னும் சொல்லலாம், ஆனால் அவர் இப்போது எம்.பி ஆகிவிட்டதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
ஊமை விழிகள் படத்தின் பின்னணி இசை பார்த்த பிறகு தான் இளையராஜா தனது பின்னணி இசையில் புது ஸ்டைலை உருவாக்கினார் என்று இந்த விழா மேடையிலேயே அரவிந்தராஜிடம் கூறினார். ஹேராம் படத்தில் புதுவிதமான பாட்டு உருவாக நான் தான் காரணம். ஆனால் இதை இளையராஜாவோ கமல்ஹாசனோ எந்த மேடையிலும் சொல்லவில்லை. எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.
இந்த வயதிலும் ரஜினிகாந்த் நடிக்கும் போது அவர் வயதை ஒட்டிய நானும் ஏன் இசையமைக்க கூடாது. நான் இசையமைக்க தயாராக இருக்கிறேன். 10 வருடங்கள் என்னை ஒதுக்கி வைத்திருந்தார் இளையராஜா. அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு, வைரமுத்து அவரிடம் பாட்டு எழுதி வளர்ந்தார். அந்த காலகட்டத்தில் கல்லூரி விழாக்களில் பேசும் போதெல்லாம் பல இடங்களில் இளையராஜா வளர்ந்து வருவதற்கு நானே காரணம். என் பாடலே காரணம் என்று வைரமுத்து கூறினார்.
இதைக் கேள்விப்பட்டு நான் அண்ணன் இளையராஜாவிடம் சொன்ன போதும், அவர் நம்பவில்லை. ஆதாரப்பூர்வமாக அதை அறிந்து கொண்ட பின்பு இளையராஜாவுக்கும், வைரமுத்துக்கும் விரிசல் ஏற்பட்டது. இளையராஜாவுக்கும், வைரமுத்திற்கும் விரிசல் ஏற்பட முக்கிய காரணமே, 'இளையராஜா என்னால் தான் வளர்கிறார் என்று வைரமுத்து வெளி மேடைகளில் பேசியது தான்" என்றார்.
தொடர்ந்து இயக்குனர் வீர அன்பரசு பேசுகையில், "கார்த்திக் ராஜா இசை அமைந்திருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.