"நாட்டின் நலனுக்காக பாடுபடுவோம்" - பிரதமர் மோடி!
நாட்டின் நலனுக்காக அடுத்த 5 ஆண்டுகள் பாடுபடுவோம் என பிரதமர் மோடி கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று பொருளாதார ஆய்வு அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
முன்னதாக இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, ”மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஆக்கப்பூர்வமான கூட்டத்தொடர் நடைபெற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நாடாளுமன்றக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மக்களின் நலன்களை கருத்தில்கொண்டு அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டின் நலனுக்காக பாடுபடுவோம், நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். வளர்ச்சிக்கான பாதையில் மத்திய அரசு தொடர்ந்து நடைபோடும் என்றார்.
நாட்டின் 140 கோடி மக்களால் பெரும்பான்மை பலத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் குரலை நசுக்கும் முயற்சியை நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். நாட்டு மக்கள் எங்களை நாட்டுக்காக அனுப்பியிருக்கிறார்கள், கட்சிக்காக அல்ல. பெரிய பொருளாதாரம் கொண்ட நாடுகளில் இந்தியா வேகமாக வளரும் நாடு என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் மிகுந்த பெருமை அளிக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில், தொடர்ந்து 8 சதவீதம் வளர்ச்சியுடன் முன்னேறி வருகிறோம்.
மூன்றாவது முறை பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அடுத்த 5 ஆண்டு காலத்திற்கு எங்கள் அரசுக்கு திசையை காட்ட உள்ளது. அமுத காலத்தில் தாக்கல் செய்யப்படும் மிக உன்னதமான பட்ஜெட் இது வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவது எங்களது கனவு மற்ற முன்னேறிய பொருளாதாரம் கொண்ட நாடுகளை விட, மிக வேகமாக இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருகிறது
வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க வேண்டும் என்ற எங்களது தொலைநோக்குத் திட்டத்திற்கு இந்த பட்ஜெட் அடித்தளம் அமைக்கும். நாடாளுமன்றத்தின் கௌரவத்தை காப்பாற்றும் வகையில் நடந்து கொள்வோம். தேசத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல இந்த மேடையை, எதிர்க்கட்சிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
“2047- ல் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது; அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டின் நலனுக்காக பாடுபடுவோம்” – 2029-இல் தேர்தல் நடக்கும்போது அரசியல் நிகழ்வுகளை நடத்தலாம் . தற்போது மக்கள் நலனே முக்கியம்” இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.