திருப்பரங்குன்றம் விவகாரம் - வழக்கு விசாரணை 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1ம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்று அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதன்பேரில், புதன்கிழமை மாலை சிஐஎஸ்எஃப் வீரர்களுடன் சென்று தீபத்தை ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தியதால் தீபம் ஏற்றாமல் திரும்பினர். இதனிடையே, சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதால், தீபம் ஏற்ற காவல்துறையினர் புதன்கிழமை இரவும் அனுமதிக்கவில்லை.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அமர்வு நேற்று தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், அவமதிப்பு வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தீபத்தை ஏற்ற வேண்டும் என்று மீண்டும் உத்தரவிட்டார். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்த காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இந்த நிலையில், இன்று காலை அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாக தமிழக அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.
அப்போது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், கோயில் நிர்வாக அலுவலர் யாரும் ஆஜராகவில்லை. இதனிடையே, மாவட்ட ஆட்சியர் மற்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பதாகவும், தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஒரே வழக்கில் 3 முறை உத்தரவுகள் பிறப்பித்தும் அமல்படுத்தாதது குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். திருப்பரங்குன்றம் சென்று அங்குள்ள நிலவரம் குறித்து சிஐஎஸ்எஃப் வீரர்கள் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதனையடுத்து திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.