கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா!
உலகப்புகழ் பெற்ற முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா இன்று (மார்ச்.03) கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு 01:30 மணியளவில் விஸ்வரூப பாரதனையும், 2 மணியளவில் உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
தொடர்ந்து அதிகாலை 5:20 மணியளவில் உள் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரத்திற்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல வகையான அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து 12 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் இந்த திருவிழாவில், நாள்தோறும் சுவாமியும், அம்பாளும் காலை மற்றும் மாலையில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர். வரும் 09-ந் தேதி அன்று சிவப்புப் பட்டு சாத்தியும், 8-ம் திருநாள் 10-ந் தேதி அன்று பச்சைப் பட்டு சாத்தி தேரில் சுவாமி சண்முகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்க இருக்கிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திருநாள் 12- ம் தேதி நடைபெறுகிறது. மாசித்திருவிழா தொடங்கியதை அடுத்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி பச்சை உடை உடுத்தி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.