"இஸ்லாமிய சிறை கைதிகளை அடித்து சித்ரவதை செய்கிறார்கள்" - சீமான் குற்றச்சாட்டு!
மதுரை நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசலில் விசாரணை கைதிகளாக சிறையிலுள்ள போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரின் குடும்பத்தினரை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர்,
"மூவரும் விசாரணை சிறைக் கைதிகளாகவே 15 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்கள். அவர்களை இப்போது சிறையில் அடித்து சித்ரவதை செய்கிறார்கள். குடும்பத்தினர் சந்திப்பதற்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. இறக்கும் தருவாயில் உள்ள கைதிகளை கூட விடுதலை செய்யவில்லை. இஸ்லாமிய மக்களுக்கு நாங்கள் தான் பாதுகாப்பு என சொல்கிறார்கள். சிறையிலேயே வைத்து பாதுகாப்பீர்களா?
இஸ்லாமிய தாய்மார்கள் சிந்தும் கண்ணீர் இந்த ஆட்சியை வீழ்த்தும். இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்தார் ஸ்டாலின். ஆனால் இதுவரை வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. உடல்நிலை காரணம் கருதி கைதிகளை விடுதலை செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் இந்த அரசு விட முடியாது என பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
குற்றத்தை ஒத்துக்கொள்ளுமாறு சிறையில் கைதிகளை அடித்து துன்புறுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆகஸ்ட் முதல் வாரத்தில் இதை கண்டித்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்" என்று தெரிவித்துள்ளார்.