"தியாகத்திற்கு மரணமே இல்லை" - கார்கில் வெற்றி தினத்தில் பிரதமர் மோடி பேச்சு!
"தியாகத்திற்கு மரணமே இல்லை என்பதை கார்கில் உணர்த்துகிறது” என கார்கில் வெற்றி தினத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
கடந்த 1999-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் ஊடுருவலைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினரிடையே கடுமையான போர் மூண்டது. உயர்ந்த மலைத்தொடரில் மிகுந்த சவால்களை எதிர்கொண்டு இந்த போர் நடைபெற்றது.
இந்த போரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்த போர் காரணமாக 527 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்தப் போரில் வென்றதை நினைவுகூரும் விதமாகவும் போரில் உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இன்று ”விஜய் திவாஸ்” எனும் பெயரில் கார்கில் போர் வெற்றி தினம் அனுசரிக்கப்படுகிறது.
விஜய் திவாஸ் விழாவில் கார்கில் போரில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு காஷ்மீரில் உள்ள கார்கில் பகுதியில் உள்ள கார்கில் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் .
இதனைத் தொடர்ந்து இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்ததாவது..
"நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்கள் ஒவ்வொருவருக்கும் நாம் கடன் பட்டிருக்கிறோம். இந்தியாவை சீர்குலைக்கும் நோக்கில் எவர் ஒருவர் நம் நாட்டை அணுகினாலும் அடக்கி ஒடுக்கப்படுவர். இந்தியா மீதான தாக்குதல்களை பாகிஸ்தான் இன்றும் மறைமுகமாக தொடர்ந்து வருகிறது.
வரலாற்றில் இருந்து பாகிஸ்தான் இதுவரை பாடம் கற்றுக் கொள்ளவில்லை. மரணமே இல்லாதது தியாகம் என்பதை கார்கில் வெற்றி நமக்கு உணர்த்துகிறது. அனைத்து விதமான பயங்கரவாத அச்சுறுத்தல்களையும் முறியடிப்போம். பயங்கரவாதிகளின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது” என பிரதமர் மோடி உரையாற்றினார்.
இதன் பின்னர் 4.1 கிலோ மீட்டர் நீளமுள்ள இரட்டைக் குழாய் சுரங்கப்பாதையாக ஷின்குன் லா சுரங்கப்பாதை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.