“துணை முதல்வர் பதவி தொடர்பாக பத்திரிகைகளில் கிசுகிசு வருகிறது; ஆனால் எனக்கு பிடித்தது...” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
‛‛எனக்கு துணை முதல்வர் பதவி வழங்கப் போவதாக பத்திரிகைகளில் கிசு கிசு வருகிறது. ஆனால் எனக்கு பிடித்தது இளைஞரணி செயலர் பதவி தான்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக இளைஞரணியின் 45ம் ஆண்டு துவக்க விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இளைஞரணி தலைமையகமான அன்பகத்தில் நடந்தது. இதில், இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி பேசியதாவது:
மோடிக்கு வெற்றி கிட்டாது
பிரதமர் மோடி, இந்த முறை, 2 அல்லது 3 தொகுதிகளை பிடித்து விட வேண்டும் என்று தமிழ்நாட்டிற்கு 6,7 முறை வந்தார். அவர் ஆயிரம் முறை வந்தாலும், வெற்றி கிடைக்காது என்று சொன்னேன். அதை மக்கள் உண்மை ஆக்கி உள்ளனர். பிரதமர் பிரசாரம் செய்தும் பா.ஜ.,விற்கு ஏமாற்றமே மிஞ்சியது. 40 தொகுதிகளிலும் ‛ இண்டியா' கூட்டணிக்கு மக்கள் வெற்றியைத் தந்தனர். வெற்றிக்கு இளைஞரணியும் காரணம். பா.ஜ., பொய்களை பரப்பி அரசியல் செய்கின்றனர்.
இங்கு பேசியவர்கள் எல்லாம் துணை முதல்வர் பதவி குறித்து தீர்மானம் நிறைவேற்றியாக சொன்னீர்கள். பத்திரிகைகளில் கிசுகிசு வருகிறது. வதந்திகளை படித்து விட்டு , இது நடக்க போகுதோ? என்று பலர் கோல் போடுகிறீர்கள், துண்டு போடுகிறீர்கள். எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக இருப்போம் . எவ்வளவு பெரிய பதவி வந்தாலும் , பொறுப்பு வந்தாலும் இளைஞரணி தான் எனது மனதிற்கு நெருக்கமானது. இளைஞரணியை மறக்க மாட்டேன்.
மக்களவை மற்றும் விக்கிவராண்டி இடைத்தேர்தலுக்கு எப்படி உழைத்தோமோ அதே போல் 2026 சட்டசபை தேர்தலிலும் உழைக்க வேண்டும். பெண்கள், தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்ட முடிவிற்கு பின்னர் நிருபர்கள் துணை முதல்வர் குறித்து கேள்வி கேட்டபோது; பொறுப்பு மாற்றம் குறித்து முதல்வர் முடிவு செய்வார் என்று பதில் அளித்தார்.