For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அயோத்தி வந்தடைந்த உலகின் மிகப்பெரிய பூட்டு!

03:56 PM Jan 20, 2024 IST | Web Editor
அயோத்தி வந்தடைந்த உலகின் மிகப்பெரிய பூட்டு
Advertisement
அயோத்தி ராமர் கோயிலுக்கு 400 கிலோ எடையுள்ள பூட்டு மற்றும் சாவி பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல்  பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதற்காக உத்தரப்பிரதேச மாநிலம்,  அயோத்தியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந் நகரே விழாக்கோலம் பூண்டுள்ளது.  இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.  சிலை பிரதிஷ்டைக்கு முந்தைய சிறப்பு சடங்குகள் கடந்த 16-ஆம் தேதி (16.01.2024) அன்று தொடங்கின. 121 ஆச்சார்யார்கள் இச்சடங்குகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வருகிற 22-ஆம் தேதி மதியம் 12.20 மணியளவில் தொடங்கும் பிரதிஷ்டை நிகழ்வு, 1 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  பிரதமர் மோடி,  ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்,  உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல்,  உபி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்,  ராமர் கோயில் அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் உள்ளிட்டோர் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதையும் படியுங்கள்: ராஷ்மிகாவின் Deep Fake வீடியோ விவகாரம்: வீடியோவை உருவாக்கியவர் கைது!

இந்த விழாவை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அயோத்தி ராமர் கோயிலுக்கு பரிசுப் பொருட்களையும்,  நன்கொடைகளையும் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், 400 கிலோ எடையுள்ள பூட்டு மற்றும் சாவி அலிகாரில் இருந்து அயோத்திக்கு வந்தடைந்தன.  இந்த பூட்டு இந்து மகா சபா சார்பில் அயோத்தி ராமர் கோயிலுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

இந்த பூட்டானது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே அலிகாரை சேர்ந்த வயதான கைவினைக் கலைஞர் சத்யா பிரகாஷ் ஷர்மாவால் உருவாக்கப்பட்டது.  சத்ய பிரகாஷ் ஷர்மா சமீபத்தில் காலமானார்.  அயோத்தி ராமர் கோயிலுக்கு இந்த பூட்டை பரிசாக வழங்க வேண்டும் என்பதுதான் அவரின் கடைசி ஆசை என்று அவரது மனைவி ருக்மணி ஷர்மா தெரிவித்துள்ளார்.   6 மாதங்களில் தயாரிக்கப்பட்ட இந்த பூட்டு 10 அடி உயரமும் 4.5 அடி அகலமும் கொண்டது.  இது உலகின் மிக பெரிய பூட்டு என்ற சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement