For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“குரலற்றவர்களின் குரலாக பெரும் சிறுத்தை திருமாவளவன் இருக்கிறார்” -கமல்ஹாசன்!

08:54 PM Apr 03, 2024 IST | Web Editor
“குரலற்றவர்களின் குரலாக பெரும் சிறுத்தை திருமாவளவன் இருக்கிறார்”  கமல்ஹாசன்
Advertisement

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் INDIA கூட்டணி வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார்.

Advertisement

வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்துள்ளது. இந்தக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிடுகின்றனர்.  இதனையடுத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள விசிக தலைவர் திருமாவளவனை ஆதரித்து ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் பரப்புரை செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

எல்லா சித்தாந்தங்களும் மக்களுக்காகத் தான். அதற்காகத் தான் நாங்கள் அனைவரும் தோலுரசி களம் கண்டுள்ளோம். இந்தியாவின் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்று அறிஞர்கள் கவலைப்படுவார்கள். நாங்கள் வீரர்கள், களம் கண்டே ஆகவேண்டும். நாங்கள் தியாகம் செய்யவில்லை வியூகம் செய்துள்ளோம்.

இன்றைய தேவையை அன்றே உணர்ந்து வந்தவர் திருமாவளவன். திருமாமணி மலரில் என்னுடைய கட்டுரையும் இடம்பெற்றிருந்தது. அதில் நான் திருமாவளவனுக்குத் தன்னிகரில்லா தலைவர் என்று தலைப்பிட்டேன். தன் வாழ்வை சமூகத்திற்குக் கொடுத்தவர்.

ஆங்கிலேயர்கள் காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பிற்கு சனாதன வாதிகள் பதறினார்கள். மண்டல கமிஷன் மற்றும் விபி சிங் அதனை அமல்படுத்த முயன்றபோது அதனை தடுக்க முயன்றவர்கள்.

தமிழக மீனவர்கள்‌ காக்கத்தவறிய அரசு இந்த பாஜக அரசு. தமிழக மீனவர்களின் படகுகள் சிறைப்படுத்தி ஏலம்விடும் பழக்கம் இன்று நடைமுறையில் இருக்கிறது. 10 ஆண்டுகளில் மத்திய அரசு ஒன்றுமே செய்யவில்லை.

விவசாயிகள் பிரச்சனையில் ஆதார விலையைத் தராமல் ஆதரவு விலையைத் தருவதாகக் கூறினார்கள் எதையும் செய்யவில்லை. இதனை எதிர்த்த விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் குண்டு வீசியும், அப்படுக்கையும் அமைத்து எதிரியைப்போல நடத்தினார்கள். நான் நகரத்திலிருந்தாலும் தினமும் சோறு சாப்பிடுகிறேன். அந்த நன்றிக்கு இன்று பேசுகிறேன்.

2 கோடி வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார்கள் ஆனால் ஒருவருக்கும் வேலை கொடுக்கவில்லை. காப்ரோட் நிறுவனங்களுக்கு மலிவு விலையில் மக்கள் சொத்தை வாரி வழங்கி வருகின்றனர். சட்டத்தை வளைத்து அதிகாரப்பூர்வமாகப் பணத்தைப் பறிக்கும் முறை தான் தேர்தல் பத்திரத் திட்டம்.

தொழிலதிபர்களை வழிக்குக் கொண்டுவர அமலாக்கத்துறை வருமான வரித்துறை போன்றவற்றை பாஜக ஏவி வருகிறது. தமிழர்களின் குரலாகத் திகழ்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திருமாவளவன் ஒடுக்கப்பட்டோருக்கு மட்டுமல்ல பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு என அனைவருக்குமான தலைவர் திருமாவளவன். சமத்துவ அரசியல் சமையலுக்கு உகந்த பானை இது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags :
Advertisement