ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக உலக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து பாகிஸ்தானுடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது.
குறிப்பாக, வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால், இரு நாடுகளிடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் இடையிலான இந்த சூழலை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்நிலையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது. இந்தக் கூட்டத்தில், இருநாடுகளும் தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவின் ஆக்ரோஷமான நடவடிக்கை மற்றும் சிந்துநதி ஒப்பந்தம் ரத்து உள்ளிட்டவை தொடர்பாக பாகிஸ்தான் புகார் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக ஐ.நா., சபைக்கான கிரேக்கத்தின் நிரந்தர பிரதிநிதியும், மே மாதத்திற்கான பாதுகாப்பு கவுன்சிலின் தலைவருமான எவாஞ்சலோஸ் செகெரிஸ் கூறுகையில், 'அனைத்து கோணங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம். அதேவேளையில், அதிகரித்து வரும் பதற்றமான சூழல் கவலையளிக்கிறது.
தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். தெற்கு ஆசிய பகுதியில் அமைந்துள்ள இரண்டு பெரிய நாடுகளான இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் குறித்து நாங்கள் கவலை அடைந்துள்ளோம். பாகிஸ்தானை விட இந்தியா பெரியது” என்று தெரிவித்துள்ளார்.