"மகளிர் உரிமைத்தொகை கொடுத்துவிட்டு டாஸ்மாக் மூலம் பறித்துக் கொள்கிறது தமிழக அரசு" - பிரேமலதா விஜயகாந்த்!
புதுக்கோட்டையில் தேமுதிக சார்பில் மது ஒழிப்பு பொதுக்கூட்டம் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் நகர செயலாளர் பரமஜோதி முன்னிலையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசியவர்,
"ஆப்ரேஷன் செந்தூரில் பாகிஸ்தானை விரட்டிய ராணுவத்தினருக்கு நான் மிகப்பெரிய சல்யூட் அடித்துக் கொள்கிறேன். 2021 தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் மதுவினால் விதவைகள் அதிகமாக இருக்கின்றனர் என்று கூறி திமுக ஆட்சி அமைத்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கு என்று கூறினார். அதையே ஸ்டாலினும் கூறினார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு மதுவை ஒழிப்பதற்கு எந்த விதமான நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை.
அதேபோன்று கனிமொழியும் பல்வேறு மதுபான ஆலைகளை நடத்தி வருகிறார் குறிப்பாக புதுக்கோட்டையிலேயே இரண்டு மதுபான ஆலைகள் அவருக்கு சொந்தமாக உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிகவை கண்டு ஏன் நீங்கள் அச்சப்படுகிறீர்கள் தொண்டர்களை கூட்டத்திற்கு வருவதற்கு காவல்துறையினர் மூலமாக கட்டுப்படுத்துகின்றனர். தடை செய்தால் நிச்சயமாக கடும் விளைவுகளை நீங்கள் சந்திப்பீர்கள். இது நாள் வரை நான் உங்களுக்கு அண்ணியாக இருந்து வருகிறேன் இனி நான் அன்னையாக மாறி உங்களை நான் காப்பாற்ற போகிறேன்.
விஜயகாந்த் இறப்பு தமிழகத்திற்கு ஒரு பேரிழப்பாகும். விவசாயிகளின் கனவாக உள்ள காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு திமுக அரசு ஒரு துளி நிதி கூட ஒதுக்கவில்லை கிடப்பில் போட்டுள்ளது திட்டத்தை பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றம் சரியான தண்டனை
அளித்துள்ளது. அதேபோன்று அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளி ஞானசேகருக்கு தண்டனை அதிக அளவு கொடுக்க வேண்டும் இதில் அவருக்கு துணை போன மற்ற குற்றவாளிகளையும் கைது செய்து அவர்களுக்கும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
இன்றைக்கு போதைக்கும், கஞ்சாவிற்கும் இளைஞர்கள் அடிமையாகி கிடக்கின்றனர். இதனால்தான் பாலியல் வன்கொடுமைகள் அதிக அளவு நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சரின் தொகுதியான குளத்தூரில் விழா ஒன்று நடைபெற்றது. மகளிர் உரிமை தொகை அளிப்பதால் பெண்கள் அனைவரும் சந்தோஷமாக உள்ளனர் என்று முதலமைச்சர் நினைத்துக் கொண்டுள்ளார்.
ஆனால் பெண்கள் அனைவரும் நன்றாக இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக பொதுமக்கள் அதற்குச் செல்லவில்லை இருப்பினும், அந்த விழாவில் வயதான துணை நடிகைகளை அழைத்துக் கொண்டு வந்து பொதுமக்கள் போல் உட்கார வைத்து அவர்களோடு அமைச்சர் சேகர்பாபு நடனமாடுகிறார். துணை நடிகைகள் அனைவரின் கைகளிலும் டூப்ளிகேட் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அளித்து அவர்களுடன் சேகர்பாபு நடனம் ஆடுகிறார்.
மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் கொடுத்துவிட்டு ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் டாஸ்மார்க் மூலமாக 5000 ரூபாய் பறித்துக் கொள்கிறது தமிழக அரசு. அரசுக்கு கிடைக்கும் நிதியை முறையாக அரசு செலவு செய்யாமல் எவ்வளவு காலம் தான் பொதுமக்களை ஏமாற்றுவீர்கள் என்று தெரிவித்துள்ளார்.